Tuesday 15 December 2009

புலிகளின் துப்பாக்கிகள் மௌனிக்க பிளவுபடும் சிங்களம்

விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்களை சுட்டுக் கொல்லும்படி கோத்தபாய உத்தரவிட்டதாக 'த சண்டே லீடர்' என்ற ஆங்கில பத்திரிகைக்கு சரத் பொன்சேகா அதிரடிப் பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார். நகமும் சதையும் போல ஒட்டி உறவாடி இலங்கை இராணுவத்தில் பல வருடங்களாக இளமைக்காலம் முதல் நண்பர்களாக இருந்த இவர்கள் இருவரும் தற்போது பதவி ஆசைக்காக எதிரும் புதிருமாக மாறியிருப்பது பல உண்மைச் சம்பவங்களை வெளிக்கொண்டுவர ஏதுவாக உள்ளது. புலிகளை யுத்தத்தில் வெற்றிகொண்ட பின்னர், சரத் பொன்சேகாவுக்கு சிங்கள மக்களிடையே பெரும் செல்வாக்கு காணப்பட்டது, அதனை தம்க்குச் சாதகமாகப் பயன்படுத்தி அவரை தம்முடன் வைத்திருந்து காரியத்தை சாதிக்க கோத்தபாய தவறிவிட்டார். எதற்கெடுத்தாலும் கோபமும் ஆத்திரமும் அடையும் கோத்தபாய, சரத்தை புறந்தள்ளி தனது அரசியல் நடவடிக்கைகளை தொடர ஆரம்பித்தது, கிணறு கிண்ட பூதம் புறப்பட்ட கதையாக தற்போது மாறியுள்ளது. அதிருப்தி அடைந்த சரத்தை பல எதிர்கட்சிகள் அணுக அவருக்கு ஜனாதிபதியாகும் ஆசை மேலோங்கியுள்ளது. சரத் ஒரு கொளுக்கட்டை என்றால் மகிந்த ஒரு மோதகம் என்ற கருத்தை அதிர்வு இணையம் ஏற்கனவே முன்வைத்திருந்தது. இரண்டும் உருவத்தில் வேறு ஆனால் உள்ளுக்குள் ஒன்று தான். தற்போது இவர்கள் சேர்ந்து செய்த கொலைகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் என்பன இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்டு இருக்கும் பகை காரணமாக சற்று வெளியே வருகின்றன. ஏதோ சரணடையும் புலிகளின் தலைவர்களைச் சுட்டுக் கொல்லுமாறு கோத்தபாய கூறினார் என்று கூறினால் தமிழர்கள் மனம் மாறி தமக்கு ஓட்டுப் போடுவார்கள் என கனவு கான்கிறார் சரத் பொன்சேகா. யுத்தம் நடைபெற்ற வேளைகளில் இவர் தலைமையில் நடைபெற்ற தாக்குதல்கள், கொத்துக் கொத்தாக எமது தமிழர்கள் கொல்லப்பட்டதும், கர்ப்பிணிப் பெண் சிதறி கருவில் இருந்த குழந்தை வெளியெ வந்து இறந்ததையும் எம் மக்கள் என்ன அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிடுவார்களா? இருவர் சேர்ந்து ஒரு கொலை செய்துவிட்டு ஒருவர் மீது பழியைப் போட்டு தப்பித்து மற்றவர் பரிசுத்தமாகப் பார்க்கிறார்களா? புலிகள் தமது ஆயுதங்களை மௌனிக்கிறோம் என்றார்கள், அப்போது கூட போரைத் தொடர்ந்து நடாத்தி, கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்கி, காயப்பட்ட போராளிகளை கொன்று, யுத்தத்தை நடத்தி முடித்த இலங்கை அரசு என்ன சொல்ல வருகிறது. இல்லை கடைசி 3 நாட்களாக தான் இலங்கையில் இல்லை அந்த நேரத்தில் தான் பல கொலைகள் நடந்தது என்று கூறும் சரத் மட்டும் அந்த வேளை நின்றிருந்தால் இதனைத் தடுத்திருப்பாரா? என்ன? யார்காதில் சுற்ற நினைக்கிறார் பூவை? புலிகள் ஏன் போரில் பின்னடைவைச் சந்தித்தார்கள், ஏன் தமது நிலத்தை இழந்தார்கள், ஏன் தமது ஆயுதங்கள மௌனித்தார்கள் என்று பல தமிழர்கள் குழம்பிப் போய் உள்ளார்கள் . தற்போது அதற்கான விடைகள் கொஞ்சம் கொஞ்சமாக கிடைக்கப் பெறுகின்றன. அவர்கள் அவ்வாறு செய்ததின் அர்தம் தற்போது புரிகிறது. தற்போது உள்ள அரசியல் சூழலை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். தமிழர்களைப் பொறுத்தவரை யார்வந்தாலும் சாதகமே . ஏன் தெரியுமா? தமிழர்களே எண்ணிப் பாருங்கள். ஒருவேளை சரத் பொன்சேகா ஆட்சிக்கு வந்தால், மகிந்த எதிர்கட்சித் தலைவர், அப்படியாயின் கோத்தபாய, உட்பட பசில் ராஜபக்ஷ எல்லோரும் யார்? இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது, இவர்கள் அனைவரின் பாதுகாப்பும் கணிசமாகக் குறைக்கப்படும் அப்போது, இவர்களை எளிதில் எதிரியால் தாக்க முடியும் , மிஞ்சிப் போனால் நாட்டை விட்டு அவர்கள் ஓடிப் போவார்கள். அப்படிப் போனாலும் புலம் பெயர் தமிழர்கள் இவர்கள் மீது வழக்கு தொடுக்க முனைப்புடன் செயல்படுவார்கள். ஒருவேளை மகிந்த திரும்பவும் ஆட்சிக்கு வந்தால் சரத் பொன்சேகா உட்பட சில இராணுவத் தளபதிகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், அப்படி அவர்கள் சென்றால், தமது வாக்கு மூலத்தைப் பதிவுசெய்து கோத்தபாய மற்றும் மகிந்தவுக்கு எதிராகச் சாட்சி சொல்ல நேரிடலாம்(வெளிநாட்டில்) அப்படி ஒரு அபாயம் நேர்ந்தால் வாழ் நாள் முழுவதும் அவர்கள் இலங்கைத் தீவில் தங்கவேண்டி ஏற்படும். அதனால் இரண்டில் எது நடந்தாலும் தமிழர்கள் அதனைச் சாதகமாக பயன்படுத்துவதே நல்லது. இதில் தமிழ்தேசியக் கூட்டமைப்போ அல்லது மனோகணேசனோ, இல்லை மலையகத் தமிழர்களோ யாரை ஆதரிக்கப் போகிறார்கள் என புலம்பெயர் தமிழர்கள் தற்போது விவாதிக்கத் தேவையில்லை. யூலியன் வாலா படுகொலையின்போது தப்பிய யுதாம் சிங் எத்தனை ஆண்டுகள் பொறுத்திருந்து தனது பகையைத் தீர்த்தான் என நாம் அறிவோம், அதனை விட 100 மடங்கு மேலாக முள்ளிவாய்க்காலில் பகொலை நடந்துள்ளது. நம்மில் எத்தனை யுதாம் சிங் தோன்றியிருக்கிறார்கள் என்று யாருக்குத் தெரியும்? நீறு பூத்த நெருப்பாக எமக்குள் எத்தனை தமிழர்கள் உள்ளார்கள் என யாருக்குத் தெரியும். உலகில் கடைசித் தமிழன் இருக்கும் வரை எவனும் இந்தப் படுகொலைகளை மறக்கமாட்டான். எங்குவேண்டும் என்றாலும் எப்போது எதுவும் நடக்கலாம். ஆயிரம் உதாம் சிங் தமிழர்களில் தோன்றலாம், எமது போராட்டம் அடுத்த பரிணாமத்தை எட்டும் .. மாவீரர்களின் ஆன்மா ஒரு சக்தியாக உருவெடுக்கும் தடைகளை உடைத்து தமிழீழம் காணும்.

No comments:

Post a Comment