Tuesday 15 December 2009

மேற்குலகம் – ஈழத்தமிழ் மக்கள் உறவுகள் தென்னாசியாவில் அமைதியை உருவாக்கும்

கடந்து சென்ற வாரம் சிறீலங்காவில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. சிறீலங்கா அரசின் மீது மேற்குலகம் மேற்கொண்டுவரும் கடும்போக்கு நடவடிக்கையின் ஒரு முக்கிய திருப்பமாக கடந்த திங்கட்கிழமை (19) ஜிஎஸ்பி பிளஸ் வர்த்தக வரிச்சலுகை தொடர்பான அறிக்கை ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையானது சிறீலங்கா அரசிற்கு அதிக அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறீலங்காவில் மோசமடைந்துள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள், தடுப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பெருமளவான மக்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் அதிக கவனங்களை தனது அறிக்கையில் செலுத்தியுள்ளது. ஈழத்தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் வலுவான கருத்தை கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 19 ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்லுகையின் விதி முறைகளை மீறிவிட்டதாக தெரிவித்துள்ளதுடன், சிறீலங்காவுக்கான வரிச்சலுகையை தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கும் தீர்மானித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முடிவானது மேலும் வலுப்பெற்றால் சிறீலங்கா மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என்பதில் ஐயமில்லை. எனினும் சிறீலங்காவை காத்துக்கொள்ள இந்தியா, சீனா போன்ற நட்புநாடுகள் முயலலாம். ஆனால் அவர்களின் உதவிகள் என்பது நீண்டகாலம் சிறீலங்காவை காப்பாற்றப்போதுமானதல்ல. இருந்த போதும் இந்தியாவின் முயற்சிகள் சிறீலங்காவுக்கு சார்பாக மேற்குலகத்தின் நகர்வுகளை மாற்றும் ஒரு காய்நகர்த்தலாகவே கருதப்படுகின்றது. உதாரணமாக இந்த வருடத்தின் நடுப்பகுதியில் சிறீலங்காவுக்கான 1.9 பில்லியன் டொலர் கடன்தொகை தொடர்பாக அனைத்துலக நாணயநிதியம் பல அழுத்தங்களை கொண்டுவர முயன்றபோது இந்தியா அதனை தடுத்து நிறுத்தியிருந்தது. சிறீலங்காவுக்கான கடன் தொகையை அனைத்துலக நாணயநிதியம் வழங்காதுபோனால் இந்தியா சிறீலங்காவுக்கு 2.6 பில்லியன் டொலர்களை கடனாக வழங்கும் என அனைத்துலக நாணயநிதியத்திற்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நேரிடையாக எச்சரிக்கையை விடுத்திருந்ததாக சிறீலங்காவின் பிரதி நிதி அமைச்சர் சரத் அமுனுகம கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இந்தியாவும், பாகிஸ்த்தானும் இணைந்து சிறீலங்காவுக்கு ஆற்றிவரும் உதவிகள் தொடர்பாகவும் அவர் தனது மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார். அதனை போன்றதொரு முயற்சியை தான் இந்தியா இந்த மாதத்தின் ஆரம்பத்திலும் மேற்கொண்டிருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்லுகையின் நீடிப்பு காலம் ஒக்டோபர் மாதம் என்பதனால் தமிழக அரசின் ஊடாக தனது நாடாளுமன்ற குழவினரை சிறீலங்காவுக்கு அனுப்பி சிறீலங்கா தொடர்பான நல்ல கருத்துக்களை மேற்குலகத்திடம் ஏற்படுத்த இந்தியா முற்பட்டிருந்தது. இந்திய நாடாளுமன்ற குழுவினரின் இந்த விஜயம் சிறீலங்காவினால் மேற்கொள்ளப்பட்டதொன்று. அதனை மலையத்தின் முன்னனி அமைச்சர் ஒருவரின் ஊடாகவே சிறீலங்கா அரச தரப்பு தமிழக அரசதரப்புடன் மே;றகொண்டிருந்தது. ஆனால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் நாடகங்களும், இந்திய மத்திய அரசின் காய்நகர்த்தல்களும் மேற்குலகத்தின் நகர்வுகளில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தவில்லை. மேற்குலகம் பொருளாதார அழுத்தங்களின் ஊடாக சில நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துவிட்டது. ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 19 ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையினை தொடர்ந்து சிறீலங்கா மீதான நடவடிக்கைக்கு அது தனது உறுப்பு நாடுகளின் ஆதரவுகளை தற்போது திரட்டி வருகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக வரிச்சலுகையானது சிறீலங்காவின் பொருளாதாரத்தின் மிகமுக்கிய ஆணிவேர், அதன் மூலம் தென்னிலங்கையில் 350,000 மக்கள் நேரிடையாகவும், 750,000 மக்கள் நேரடியற்ற வழிகளிலும் தொழில்வாய்ப்புக்களை பெற்று வருகின்றனர். எனவே தான் அரசோ அல்லது எதிர்க்கட்சிகளோ என்ன கூறினாலும் இந்த வரிச்லுகை தமக்கு அவசியம் என தொன்னிலங்கை தொழிலாளர் சங்கப்பிரதிநிதிகள் கடந்த மாதம் தெரிவித்திருந்தனர். அதாவது இந்த வரிச்சலுகை நிறுத்தப்பட்டால் பெருமளவான தென்னிலங்கை மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் தள்ளப்படலாம் என்ற அச்சங்கள் தென்னிலங்கையில் எழுந்துள்ளது. இந்த வரிச்சலுகை நிறுத்தப்பட்டால் எல்லா இன மக்களும் பாதிப்படைவார்கள் என அரசு தெரிவித்து வரும் போதும் அதன் பலன்களை வடக்கு – கிழக்கு மக்களை சென்றடைந்ததில்லை என்பதே உண்மையாகும். சிறீலங்காவை பொறுத்தவரையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 51 சதவிகித ஆடை ஏற்றுமதியை மேற்கொண்டு வருகின்றது. இதன் மூலம் அது 3.5 பில்லியன் டொலர்களை வருமானமாக ஆண்டுதோறும் பெற்று வருகின்றது. இந்த வரிச்சலுகையானது ஐரோப்பிய ஒன்றியத்தை விட சிறீலங்காவுக்கே அதிகம் தேவையானது. ஏனெனில் சிறீலங்காவின் ஏற்றுமதிகள் நின்றுபோனால் அதனை பங்களாதேசம், சீனா, தாய்லாந்து போன்ற நாடுகள் பிரதியீடு செய்துகொள்ளும். அவை தான் சிறீலங்காவுக்கு போட்டியாக உள்ள நாடுகள். எனவே இழப்பீடுகள் என்பது சிறீலங்காவுக்கு தான் அதிகம், ஐரோப்பிய ஒன்றியத்தை பணியவைப்பதற்கு இந்தியா, ஈரான், லிபியா போன்ற நாடுகளின் ஒத்துழைப்புக்களை சிறீலங்கா அரசு நாடியிருந்த போதும் அவை அதிக மாற்றங்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் போக்கில் ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (22) ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றத்தில் சிறீலங்கா மீதான தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறீலங்கா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம் அதிகப்படியான வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் 60 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர், அதற்கு எதிராக யாரும் வாக்களிக்க முன்வரவில்லை. மூன்று உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை. இந்த தீர்மானத்தில் சிறீலங்காவில் மோசமடைந்துள்ள மனித உரிமை மீறல்கள், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் போன்றன முக்கிய இடத்தை பிடித்துள்ளன. சிறீலங்காவில் வாழும் எல்லா சமூகமும் சம உரிமைகளுடன் வாழவேண்டும் என்ற வலுவான நிலைப்பாட்டை மேற்குலகம் கொண்டுள்ளது. ஆனால் அதற்கான நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டிய புறச்சூழல்களை தான் அவர்கள் வலுப்படுத்திக்கொள்ள வேண்டும். இதனிடையே அமெரிக்காவின் வெளியுறவு திணைக்களத்தினால் காங்கிரஸ் சபையில் கடந்த மாதம் சமர்ப்பிக்கப்படவிருந்த சிறீலங்கா தொடர்பான அறிக்கை கடந்த புதன்கிழமை (21) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் சிறீலங்காவில் நடைபெற்ற படை நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட போரியல் குற்றங்கள் தொடர்பாக அழுத்தமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும் அங்கு மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள், போரியல் குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் அவசியம் என்பதையும் அது வலியுறுத்தியுள்ளது. இந்த அறிக்கையில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட சிறார் படை சேர்ப்பு, சிறீலங்கா அரசினாலும், விடுதலைப்புலிகளினாலும் மேற்கொள்ளப்பட்ட பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், சிறீலங்கா அரசினாலும், அவர்களுடன் சோந்தியங்கும் துணை இராணுவக்குழுவினராலும் மேற்கொள்ளப்பட்ட பலவந்தமான கடத்தல்கள் போன்றன அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மனிதாபிமான தேவைகள் தவிர்ந்த சிறீலங்காவுக்கான ஏனைய நிதி உதவிகளை இடைநிறுத்துமாறும் அமெரிக்க அரசுக்கு இந்த அறிக்கை பரிந்துரை செய்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படை உரிமைகளை சிறீலங்கா அரசு மதிக்கும் வரையிலும் சிறீலங்காவுக்கான நிதி உதவிகள் இடைநிறுத்தப்படவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க வெளியுறவுத்திணைக்களத்தின் இந்த அறிக்கையை தொடர்ந்து சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போரியல் குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக சுயாதீன விசாரணைக்குழுவை அமைப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை, மனித உரிமைகள் ஆணைக்குழு என்பன முன்வர வேண்டும் என அமெரிக்காவை தளமாக கொண்ட அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிராட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். சிறீலங்கா தொடர்பாக மேற்குலகத்தின் நகர்வுகள் மிகவும் வேகமாக இடம்பெற்று வருகின்றன. கொங்கோவில் ஐ.நாவின் அமைதிபடையின் நடவடிக்கைகளை மேற்கொண்ட அதிகாரியான பற்றிக் கமேட் என்பவரை சிறீலங்காவுக்கு அனுப்புவதற்கு ஐக்கிய நாடுகள் சபை திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாரமளவில் சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த பற்றிக்கின் விஜயத்தை சிறீலங்கா அரசு தனது அழுத்தங்களை பயன்படுத்தி நவம்பர் 23 ஆம் நாளுக்கு பின்போட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவை சேர்ந்த மேஜர் ஜெனரலான பற்றிக் இன் விஜயத்திற்கு முன்னர் தடுப்பு முகாம்களில் உள்ள இளைஞர்கள் பலரை இடம்மாற்றும் முயற்சிகளை மேற்கொள்வதற்கே சிறீலங்கா இந்த காலஅவகாசத்தை மேற்கொண்டுள்ளதாக ஐ.நாவின் ஊடக மையமாக இன்னசிற்றி பிரஸ் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்துள்ளது. இருந்த போதும், மேற்குலகின் இராஜதந்திர அழுத்தங்களில் இருந்து தப்பும் முயற்சிகளை சிறீலங்கா கடந்த 22 ஆம் நாள் ஆரம்பித்துள்ளது. அதாவது இடம்பெயர்ந்த மக்களில் ஒரு பகுதியினரை வடபகுதியில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகளை சிறீலங்கா அரசு கடந்த வியாழக்கிழமை (22) அவசர அவசரமாக மேற்கொண்டிருந்தது. மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் ஒரு தொகுதி மக்கள் அவசர அவசரமாக குடியமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு அப்பாலும் அரசினால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பல உள்ளன என்பதே மேற்குலகத்தின் கருத்து. மேற்குலகத்தின் இந்த கருத்துக்களை வலுப்படுத்தும் முயற்சிகளை புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் தொடர்ந்து மேற்கொண்டே வருகின்றனர். மேற்குலகத்திற்கும் ஈழத்தமிழ் மக்களுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்படுமாக இருந்தால் அது தென்ஆசிய பிராந்தியத்தில் நிரந்தர அமைதியையும், ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளையும் பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கைகள் ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் வலுவடைந்து வருகின்றது. உலகில் சிறிதளவேனும் மனிதநேயம் தப்பிப்பிழைத்துள்ளது என்பதை மேற்குலகத்தின் இந்த நடவடிக்கைகள் தான் எடுத்துக்காட்டுவதாக ஈழத்தமிழ் மக்கள் வலுவாக நம்புகின்றனர். எனவே எதிர்வரும் மாதங்கள் மேலும் பல மாற்றங்களை கொண்டுவரலாம் என்பது எல்லோரினதும் எதிர்பார்ப்புக்களாகும்

No comments:

Post a Comment