Tuesday 15 December 2009

அமெரிக்காவின் அந்தர் பல்டியும் கைவிடப்பட்ட ஈழத் தமிழர்களும்

தனது வெளியுறவுக் கொள்கையில் மாற்றம்! இலங்கை அரசின் உறவை நாம் இழக்க விரும்பவில்லை! இலங்கை அரசு ஒரு இறைமையுள்ளது! தற்போது அமெரிக்க அரசியல் வாதிகளின் வாயில் இருந்து வரும் சொற்கள் இதுவாகும். எங்கிருந்து வந்தது இந்தத் திடீர் மாற்றம் என அனைத்துத் தமிழர்களும் வியந்து நிற்கின்றனர். நாங்கள் மாறியிருந்தால் தானே, அப்பவும் எப்போதும் நாம் ஒரே மாதிரித் தானே இருந்தோம் என்பதைப் படம் போட்டுக் காட்டியுள்ளது அமெரிக்கா. விடுதலைப் புலிகள் முள்ளிவாய்க்காலில் இறுதியுத்தத்தில் ஈடுபட்டிருந்த வேளை, தமது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்தனர். பசுபிக் பிராந்தியத்தில் நிலைகொண்டிருந்த அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான கப்பல் அகதிகளை மீட்டு விடுதலைப் புலி உறுப்பினர்களை மூன்றாவது நாடு ஒன்றிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகின, இருப்பினும் பின்னர் இறுதி நேரம் அமெரிக்கா கையை விரித்தது. பின்னர் சட்டலைட்டில் படங்களைப் பிடித்து மனிதப் புதைகுழிகள், ஆட்டிலறித் தாக்குதல் நடைபெற்ற இடங்களை புகைப்படம் எடுத்து வெளியிட்டு ஏதோ மனித உரிமை காக்கப்படவேண்டும் எனக் கொக்கரித்தது அமெரிக்கா. அத்துடன் நிறுத்தாமல், சர்வதேச நாணய நிதியம் வழங்க இருந்த கடன்தொகையை நிறுத்துவதுபோல நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, பின்னர் ச.நா. நிதியம் கொடுக்க இருந்த தொகையைவிட மேலதிகமாகக் கொடுக்க உதவியது. அவ்வப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் மனிதப் பேரவலம், யுத்தக் குற்றம் போன்ற அறிக்கைகளை தயாரித்து அமெரிக்க அரசுக்கு அனுப்ப அதனை வாங்கி குப்பைத் தொட்டியில் இட்டது ஒபாமா அரசு. தற்போது முதற்பெண்மணி, மற்றும் அவரது முதல் நாய் என்பன அந்த அறிக்கை பேப்பரில் பந்துசெய்து விளையாடுகிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது, முதலில் கிலாரி கிளின்ரனுக்கும், பின்னர் அவர் வெற்றியடையமாட்டார் எனத் தெரியவர ஓபாமாவிற்கும் தமிழர்கள் பெரும் தொகைப் பணத்தை வாரி இறைத்தனர். தமிழர்களுக்கு ஒரு விடிவு வரும் அதை அமெரிக்கா பெற்றுத் தரும் என நம்பி இருந்தனர். எவரையும் நம்பாமல், தம்மையே நம்பி சிறிய படைகளுடன் வலுவாக இருந்த விடுதலைப் புலிகள் இறுதியில் பெரும் படையுடன் இருந்தாலும் ஒரு வெளிநாட்டை நம்பி பல பின்னடைவுகளைச் சந்தித்தனர். அது வேறு எந்த நாடும் அல்ல சாட்ஷாத் அமெரிக்காவே தான். இத்தனை நடந்த பின்னரும் ஏதோ தமிழர்களுக்கு உதவுவதுபோல நடந்து பல தமிழ் ஆதரவாளர்களையும், புத்திஜீவிகளையும் நம்பவைத்து, அவர்களிடம் இருந்து தனக்குத் தேவையான தகவல்களைப் பெற்ற பின்னர், தற்போது தமது வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது அமெரிக்க அரசு. தமிழர்களாகிய நாம் ஒன்றை புரிந்து வைத்திருக்கவேண்டும். இந்தியாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும் “ரோ” அமைப்பும் எதை விருப்புகிறதோ அதுவே நடக்கும். அதே போல ஓபாமா ஆட்சிக்கு வந்தாலும் அங்கு FBI மற்றும் CIA போன்ற உளவு நிறுவனங்கள் என்ன சொல்கிறதோ அவையே இறுதி முடிவும் ஆகும், இதில் நாம் என்னதான் தலைகீழாக நின்றாலும் நடக்காது எமது விடயம். இதுவே யதார்த்தமாகும். விடுதலைப் புலிகளின் வளர்ச்சிகண்டு உலகமே அச்சம் கொண்டிருக்கவேண்டும். அதுவும் அமெரிக்கா மிகுந்த கவலை அடைந்திருக்கவேண்டும் அதனால் தான் புலிகளை அழிக்க பல நீண்ட திட்டங்களை அமைத்துக் கொடுத்துள்ளது. ஒரு களம் அமைத்துக் கொடுத்துள்ளது. அமெரிக்க கைப்பொம்மையான பான் கீ மூன் இன்று என்ன செய்கிறார்? ஏன் பாதுகாப்புச் சபையில் இலங்கை குறித்த விவாதம் நடைபெறும் போது சீனா எதிர்த்தது. ரஷ்யா இலங்கைக்கு ஏன் ஆதரவு வழங்கியது? அப்போது ஏன் அமெரிக்கா அதில் தலையிடவில்லை? இவை எல்லாம் மறைக்கப்பட்ட விடயங்கள். பல உலக நாடுகள் தமிழன் காதில் பூ வைத்திருக்கின்றன ஆனால் அமெரிக்கா தற்போது வைத்துள்ளதுதான் பெரிய பூ. உலகத் தமிழர்கள் ஒன்றை நன்கு புரிந்து வைத்திருக்கவேண்டும். போராடாத இனம் வென்றதாகச் சரித்திரம் இல்லை. எமது போராட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் உலக நாடுகளை நாம் எதிரியாய்ப் பார்க்கவேண்டியது இல்லை, அவர்களை நம்பாமல் செயல்படுவதே நல்லது. பல உலக நாடுகளிடம் நாம் சென்று உதவுமாறு கோரிக்கை விடுப்பதை விட நாமே போராடி ஜெயிப்பதே நல்லது. எமது ஒற்றுமை எமது போராட்ட பங்களிப்பு என்பன புதுவேகத்துடன் ஆரம்பிக்கப்படவேண்டும். 33,000 மாவீரர்கள் இறந்ததும், அவர்கள் கனவுகளும், போராட்டங்களும் அமெரிக்காவுக்குப் புரியுமா? அவர்களையும் பயங்கரவாதிகளாக அல்லவா பார்க்கும் அமெரிக்கா, மாவீரரின் உன்னதம் தமிழனுக்குத் தானே தெரியும், இதில் நாம் ஏன் வேறு நாடுகளிடம் சென்று மடிப்பிச்சை கேட்கவேண்டும்? உலக நாடுகளை எமது குறிக்கோளை அடைய ஒரு கருவியாகப் பாவிக்கலாமே ஒழிய அவர்களை நம்பி அதில் ஏறிப் பயணிக்க முடியாது என்பதை தமிழர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும், இது இந்தியா தான் தமிழர்களுக்கு தீர்வைப் பெற்றுத்தரும் என்று அலையும் ஒரு சிறு கூட்டத்தினருக்கும் பொருத்தமாகும்

No comments:

Post a Comment