Tuesday 15 December 2009

ஈழ அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை தேவையா?

கருணாநிதி, ஜெயலலிதா, காங்கிரஸ் உள்ளிட்ட எல்லா தமிழகக் கட்சிகளுக்குமே ஈழத் தமிழர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டிய நிர்பந்தம். ஆனால் என்ன செய்வதென்றுதான் தெரியவில்லை. ஏதாவது செய்து அதைச் சொல்லி உலகத் தமிழர்களிடம் இழந்த மதிப்பை மீண்டும் தூக்கி நிறுத்திவிடலாம் என்கிற உத்வேகத்தில் உதித்த ஐடியாதான் ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் யோசனை. திமுக நடத்திய அறிஞர் அண்ணாதுறை நூற்றாண்டு விழா மாநாட்டில் ஈழ அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு. டில்லிக்கும் கடிதம் எழுதப்பட்டது. ஆனால் முதலில் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியா நிரந்தரக் குடியுரிமை கொடுக்குமா? அப்படிக் கொடுத்தால் பர்மா, திபெத், வங்கம், போன்ற நாடுகளில் இருந்து வந்து காலம் காலமாக இருக்கும் அகதிகளுக்கும் குடியுரிமை உண்டா? அவ்வாறு குடியுரிமை வழங்கும் பட்சத்தில் அது என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும். என்கிற எந்த பின்விளைவுகளைப் பற்றியும் யோசிக்காமல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பதோடு, மத்திய அரசின் நூறு சதவீத ஈழ விரோத போக்கை மறந்தும் விடுக்கப்பட்ட கோரிக்கை என்றே தெரிகிறது. எண்பதுகளின் ஜூலைக் கலவரங்களைத் தொடர்ந்து தமிழகத்திற்கு அகதிகள் வரத்துவங்கினர். கடந்த முப்பதாண்டுகளில் பல் வேறு காலக்கட்டங்களில் ஈழ அகதிகள் மண்டபம் வழியாக வந்த வண்ணமே இருந்தனர். ராஜீவ்கொலைக்குப் பிறகு ஈழ அகதிகளை வரவேற்பதில் மத்திய,மாநில அரசுகள் தயக்கம் காட்டின, புலிகள் ஊடுறுவார்கள் என்கிற ஒரு பூச்சாண்டி காரணமாக ஈழ அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதில் ஏராளமான தடைகளை ஏற்படுத்தியதோடு, கடல் எல்லையை வலுப்படுத்தியதன் மூலம் கண்காணிப்பின் மூலம் ஈழ மக்களை வடிகட்டினார்கள் மத்திய மாநில ஆட்சியாளர்கள். இதில் கருணாநிதியோ, ஜெயலலிதாவோ இருவருமே ஒருப்போலவே நடந்து கொண்டனர். எண்பதுகளின் தொடங்கி இன்று வரை சுமார் (கடந்த ஆண்டு செப்டம்பர் மாத முடிவில் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி தமிழ் நாட்டில் உள்ள 25 மாவட்டங்களில் 73 ஆயிரத்து 378 இலங்கை அகதிகள் வசிக்கிறார்கள் ) ஆனால் முகாமுக்குள்ளும் வெளியிலுமாக இரண்டு லட்சம் அகதிக் குடும்பங்கள் வாழ்வதாக தெரிகிறது. இவர்களை எப்படியாவது தமிழகத்தை விட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்புவதில் இந்தியா முனைப்பு காட்டத் துவங்கியுள்ளது. மத்திய அரசின் கொள்கை இலங்கை அகதிகள் விவாகரத்தில் இப்படி இருக்க மாநில அரசோ, கட்டாயப்படுத்தி யாரையும் திருப்பி அனுப்பக் கூடாது என்றது. ஈழ அகதிகளை திருப்பி அனுப்பும் முயர்ச்சி 1992‐ல் ஒருமுறை முன்னெடுக்கப்பட்ட போது ராமதாசும், நெடுமாறனும் நீதிமன்றத்திற்குப் போய் தடையாணை பெற்றார்கள். தவிறவும் தமிழகத்தில் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக அந்த முயர்ச்சி அப்போது கைவிடப்பட்டது. ஆனால் இப்போது இலங்கையில் போர் முடிந்து விட்டதாகவும் அங்கு சுமூகச் சூழல் நிலவுவதாகவும் இலங்கையின் குரலையே இந்தியாவும் பிரதிபலிக்கிறது. அதையே தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகள் மீது திணிக்கவும் பார்க்கிறது. மத்திய வெளியுறவுத்துறை அகதிகளை திருப்பி அனுப்பும் கொள்கை முடிவை எடுத்து பல மாதங்கள் ஆகி விட்ட நிலையில், மத்திய அரசின் விருப்பத்திற்கு நேர் எதிராக மாநில அரசு, அல்லது ஆளும் கட்சியான திமுக ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வேண்டும் என்று கோருகிறது. ஒன்றிலோ அவர்களை இராணுவச் சர்வாதிகார இலங்கைக்கு திருப்பி அனுப்புவது, அல்லது அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை கொடுத்து இலங்கை பிரஜாஉரிமையைப் பறிப்பது. அகதி வாழ்வின் மிக மோசமான விளிம்புக்கு ஈழ அகதிகள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இலங்கையில் பெரிய அளவிலானா சமாதானமோ, இணக்கமான வாழ்வோ இப்போதும் இல்லை. போர் இல்லை அவளவுதானே தவிற தமிழ் மக்கள் அதே அச்ச உணர்வோடுதான் இன்றளவும் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இங்கிருக்கும் லட்சக்கணக்கான அகதிகளை வலுக்கட்டாயமாகவோ, நிர்பந்தித்தோ அங்கு அனுப்புவது அவர்களுக்கு பாதகமாகவே அமையும், அதே நேரத்தில் இவர்களுக்கு குடியுரிமை வழங்குவதும் ஒரு வகையில் பாதகமானதே. ஏற்கனவே பத்து லட்சம் தமிழ் மக்கள் இலங்கையில் இருந்து வெளியேறி உள்ளார்கள். அவர்கள் புலம்பெயர் நாடுகளில் குடியுரிமை வாங்கியும் வாங்காமலும் வாழ்கிறார்கள். முப்பத்தைந்து லட்சத்தைக் கொண்ட ஒரு இனத்தில் இந்த இடப்பெயர்வு என்பது ஆக மோசமான அரசியல் பலவீனத்தை ஏற்படுத்தும் சூழலை நாம் காண்கிறோம். இந்நிலையில் இங்கிருக்கும் அகதிகளுக்கும் இந்தியா குடியுரிமை கொடுத்தால் ஒட்டு மொத்தமாக தேர்தல் ஜனநாயகத்தின் மூலம் கூட கிடைப்பதாக இருக்கும் பாராளுமன்ற அதிகாரத்தைக் கூட ஈழ மக்கள் இழக்க நேரிடும். இருபதாயிரம் வாக்குகளே இலங்கையின் ஒரு தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானித்து விடும் என்கிற நிலையில், இந்தத் தொகை என்பது இந்தியாவுக்கு ஒன்றுமே இல்லை இலங்கைக்கு பெரிய விஷயம்.ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், எதிர்கால வாழ்வே கேள்விக்குள்ளாகி அச்சம் படர்ந்திருக்கும் நிலையில். தேர்தல் நடைமுறை மூலமே ஈழ மக்கள் தங்களுக்கான அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். எதிர்காலம் என்பது புரிபடாத புதிராக இருக்கும் சூழலில், இரண்டு லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வங்கியை இல்லாமல் ஆக்குவதன் மூலம் அவர்களின் எதிர்கால அரசியல் கேள்விக்குள்ளாகலாம்.தவிறவும் ஐய்ரோபிய நாடுகளில் பொருளாதார,கலாசார மேம்பாடுகளோடு ஒப்பீட்டளவில்தான் மேம்பட்ட வாழ்வை வாழும் புலத்து மக்களை இந்தியக் குடியுரிமையோடு ஓப்பிடவே முடியாது ஏனென்றால் சொந்தக் குடிகளோ பட்டினியில் சாகும் போது, அகதிகளுக்கு வழங்கப்படும் குடியுரிமையும் சிவில் உரிமையும் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க முடிகிறது. செய்யவேண்டியது என்ன? இந்நிலையில் சட்டப்பேரவையில் அகதிகள் தொடர்பாக பேசிய மாநில அமைச்சர் அன்பழகன் இலங்கை யுத்தம் காரணமாக தமிழகத்துக்கு வந்த இலங்கை அகதிகள் இங்கே வசிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள 115 அகதிகள் முகாம்களில் 19 ஆயிரத்து 705 குடும்பங்களைச் சேர்ந்த 73 ஆயிரத்து 451 தமிழர்கள் வசிக்கின்றனர். மொத்தம் 26 மாவட்டங்களில் அகதிகள் முகாம்கள் உள்ளன. 1983ம் ஆண்டு முதல் 87 வரை முதல் கட்டமாகவும், 1989ம் ஆண்டு முதல் 91 வரை 2வது கட்டமாகவும், 1996 முதல் 2003 வரை மூன்றாவது கட்டமாகவும், 2006ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி முதல் தற்போது வரை நான்காவது கட்டமாகவும் தமிழகத்திற்கு அகதிகள் வந்துள்ளனர். இன்னும் வந்து கொண்டிருக்கின்றனர்.தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளுக்காக 2008, 2009ம் ஆண்டில் தமிழக அரசு ரூ. 44.34 கோடியை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர 16 கோடியில் அகதிகளுக்காக திட்டம் தீட்டப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் அன்பழகன் தெரிவித்தார். இந்நிலையில் இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ள சூழலில் ஈழ அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்பும் யோசனையில் இந்திய மத்திய அரசு இருப்பதாகத் தெரிகிறது.ஆனால் அகதிகளை திருப்பி அனுப்பும் முடிவு தமிழகத்தில் கொந்தளிப்புகளை உருவாக்கும் என்பதால் மத்திய அரசு நிதானப் போக்கை இதில் கடைபிடிக்கிறது. இந்நிலையில் அகதிகளுக்காக மாநில அரசு உருவாக்கியிருக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் அகதிகளை நிரந்தரமாகவே ஏற்றுக் கொள்ளும் சூழல் எழலாம் என்கிற நிலையில். தமிழகத்தில் உள்ள அகதிகளிடம் சுதந்திரமான அமைப்பு ஒன்றை வைத்து மனித உரிமை ஆர்வலர்களின் கண்காணிப்பில் அவர்களிடம் இந்த குடியுரிமை விருப்பம் தொடர்பாக கருத்தரிய வேண்டும் என்பதோடு, அவர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். குடியுரிமை வேண்டுமா? வேண்டாமா?என்பதை முடிவு செய்ய வேண்டிய உரிமை ஈழ அகதிகளுடையதே அல்லாமல் இங்குள்ள தலைவர்களுடையது அல்ல, மாறாக இங்கு அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களின் இழிந்த வாழ்வை நீக்க உருப்படியாக ஏதாவது செய்யலாம். அவர்களுக்காக வழங்கப்படும் மானியங்கள் உணவுகள் எதுவும் பொதுமானதாக இல்லாத நிலையில் மிகவும் ஏழ்மையான துன்ப வாழ்வையே அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு வழங்கப்படுகிற மானியங்கள் உயர்த்தப்படவேண்டும். அவர்களின் சிவில், சமூக வாழ்வின் எல்லா சுதந்திரங்களும் பேணப்பட வேண்டும். அகதிகளும் கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்கு தனி வாரியம் அமைக்க வேண்டும். அவர்கள் தற்காலத்தில் எதிர் கொள்ளும் வாழ்வை சுயமரியாதையான வாழ்வாக மாற்ற முயர்சிக்க வேண்டுமே தவிற அகதிகளை ஒன்றிலோ அந்தப் பக்கம் தள்ளிவிடுவது, அல்லது இந்தப் பக்கம் இழுத்து பாழடிப்பது ஆகாது.

No comments:

Post a Comment