Tuesday 15 December 2009

புலம்பெயர் தமிழீழமே சீரழியும் எங்கள் நாட்டின் கலாச்சாரத்தை காப்பாற்றுங்கள்

அன்பான உறவுகளே! இன்று மானமுள்ள ஈழத் தமிழனின் ஒரேயொரு பற்றுக் கோடாயிருப்பது நீங்கள் மட்டும்தான். உங்கள் செயற்பாடுகளால் மட்டும்தான் இன்று தாய் தமிழ் ஈழ அன்னை உவகை கொண்டிருக்கின்றாள். உலகப்பந்தில் எமக்கொரு நாடு வேண்டும். கல்தோன்றி மண்தோன்றாக்காலத்து மூத்த தமிழுக்கென்று ஒரு நாடு வேண்டும். ஒரு அங்கீகாரம் வேண்டும் என்று போராடுபவர்கள் நீங்கள் மட்டும்தான். நாங்கள் தும்மி இருமுவதற்கும் வெம்பி அழுவதற்கும் எமக்கென்றோர் கந்தகமணமில்லா பூமி வேண்டும் என்று முப்பத்தையாயிரத்திற்கு மேற்பட்ட மானமுள்ள தமிழர்களெல்லாம் மண்ணுக்குள் போய் தெய்வங்களாகிவிட்டனர். அவர்களின் ஈகத்திற்கு எல்லையே இல்லை. வெறும் வயிறு வளர்த்து வாழ்ந்து கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு அதைப்பற்றி எழுதக்கூட அருகதை இல்லை. இருந்தாலும் ஆலையில்லா ஊரில் இருப்பது போன்ற உணர்வுடன் இம்மடலை எழுதுகின்றேன். இன உணர்வை எழுத யாரும் இல்லாததால் இலுப்பைப்பூ நான் சக்கரையாகிவிட்டேன். இங்கேயிருக்கும் மனிதர்களில் அநேகருக்கு தாய்மொழி தாய்நாடு என்ற பற்றெல்லாம் மே 18 உடன் வற்றிவிட்டது. மானமுள்ள தமிழனை சந்திப்பது மிகவும் கஷ்டமாயிருக்கின்றது. ஒன்றில் மானத்தமிழன் எல்லாம் இறந்துவிட்டார்கள். இல்லையென்றால் ஊமையாகிவிட்டார்கள். இங்கு நல்லின மரங்களெல்லாம் அழிந்துவிட்டன. கள்ளியும் குருவிச்சையும் நாகதாளியும் காடு மண்டிப் போய்விட்டது. இளைஞர்கள் மனதில் காதலும் காமமும் நிரம்பி வழிகின்றதே தவிர தமிழின உணர்ச்சி செத்துவிட்டது. செல்போன், டிஸ் ரிவி, இன்ரநெற், ஆபாசப் படங்கள் என்று காமக்களியாட்டம் நடைபெறுகின்றது. பிள்ளைகளைப் பெற்று வீசிவிட்டுச் செல்லும் கன்னித்தாய்மார் அதிகரித்துவிட்டார்கள். வழியில் தெருவில் கல்லூரி செல்லும் ரியூசனுக்கு செல்லும் மாணவர்கள் – இவர்கள் பதினெட்டு வயது கூட நிரம்பாதவர்கள் – செய்யும் கூத்துக்கள் தாங்க முடியவில்லை. இங்கிருக்கும் தியேட்டர்களில் இப்போது பொக்ஸ் வசதி எல்லாம் ஏற்படுத்தி கலாசாரத்தை சீரழிக்கும் பங்கினை செவ்வனே செய்கிறார்கள். யாழ். பிரபல பெண்கள் பாடசாலையொன்றில் ஆசிரியர் பல கலாசார சீரழிவுகளை செய்கிறாராம். பல்கலைக்கழகத்தில் அந்தப் பழமைபெற்ற விரிவுரையாளருக்கு இப்போது “புலி” பற்றிய “கிலி” ஏதுமின்றி தனது விளையாட்டுக்களை நடாத்துகிறாராம். அவரது சிஷ்ய கோடிகளும் பலர் முளைத்திருக்கிறார்களாம். விடுதலைப்புலிகளும் அவர்களது இறுக்கமான கலாச்சார கட்டுப்பாடுகளும் இருந்த வரையில் யாழ்ப்பாணம் தலை நிமிர்ந்திருந்தது. இப்போது கரையுடைத்த காட்டாற்று வெள்ளம் போல் கலாசார சீரழிவு தலைவிரித்து ஆடுகின்றது. சீதனம், சாதீயம் பழரதேச வாதம் என்பனவும் தம்பங்குக்கு சீரழிக்கின்றன. என்னருமைச் சகோதரங்களே! தம்பிமாரே! தங்கையரே! நீங்கள் பாடுபட்டு பனியிலும் வெயிலிலும் வாடி பணம் உழைத்து உங்கள் வயிற்றிற்கு கூட சேர்த்து வைக்காது இங்கே யுள்ளவர்களுக்கு அனுப்பி வைக்க அவர்கள் செய்யும் கொடுமைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. எனவே என்னியவர்களே…! தேவையைப் பொறுத்து பணம் அனுப்புங்கள். அளவுக்கு மீறி அனுப்ப வேண்டாம். உங்கள் பணம் எம் தாய் நாட்டின் கலாசார சீரழிவுக்கு வித்திடுகின்றது. இங்கே இருப்பவர்களையும் உடம்பை வளைத்து உழைக்க வையுங்கள் வெளிநாட்டிலிருக்கும் சகோதரங்கள் உழைத்து அனுப்ப இங்கே வேளைக்கு வேளை உண்டு கொழுத்து சந்திக்கு சந்தி நின்று குறுப் குறூப்பாபாக சண்டித்தனம், காவாலித்தனம் எல்லாம் பெருகிவிட்டன. இங்கு பல சமூக சேவை நிறுவனங்கள் எல்லாம் புலம் பெயர் தமிழர்களிடம் கையேந்தி தம் வயிறு வளர்க்கும் நிலையில் இருக்கின்றன. கோயில் கட்டுகிறோம், பாடசாலை கட்டுகிறோம் என்றெல்லாம் நிதிக்கு வருவார்கள். ஏய்த்து எமாற்றி பிழைப்பவர்கள் பெருகிவிட்டார்கள். உழைப்பை நம்பிய காலம் மலையேறிவிட்டது. விவசாயம் செய்ய இப்போதெல்லாம் எம்மவர்களால் முடிவதில்லை. கூழ் குடித்த காலம் போய் கொக்கோ கோலா கேட்கிறது. அதை குடிக்க வேண்டாமென்று சொல்லவில்லை. அவரவர் உழைத்து குடியுங்கள். எவனோ பனியில் நடுங்கி உழைத்த பணத்தில் பீரும் விஸ்கியும் இன்னபிற குடிவகைகளையும் இவர்கள் அனுபவிக்கிறார்கள். சகோதரங்களே..! பாத்திரமறிந்து பிச்சையிடுங்கள். உங்கள் உழைப்பை வீணாக்காதீர்கள். மலரவிருக்கு நம் தமிழ் தேசத்தில் நீங்கள் வந்து தலை நிமிர்ந்து வாழ உங்களுக்கும் பத்திரப்படுத்துங்கள். உங்கள் சகோதரங்களில் அன்பு இருக்கும்தான் ஆனால் அன்பு வம்பாகிவிடக்கூடாதில்லையா. அவர்களையும் உழைத்து சாப்பிட வையுங்கள் நீங்கள் காசு அனுப்பி அவர்களை சோம்பேறிகளாக்காதீர்கள். தமிழீழத்தினைச் சுற்றி கடலும் நன்நிலமும் இருக்கின்றன. இவற்றை வைத்துத்தானே பண்டைத்தமிழன் தொழில் செய்து வாழ்ந்தான். வெளிநாட்டுப்பணம் எப்போது வந்தது. சீதனம் இங்கு தலைவிரித்து ஆடுகின்றது. உங்கள் பணத்தால் பணத்தின் அருமை பெறுமதி இங்கு குறைந்து வெளிநாட்டுத் தொடர்பில்லாத ஏழை வீட்டு குமருகள் கரைசேர முடியா நிலை இருக்கின்றது. ஆண் பிள்ளையைப் பெற்றவர்கள் முப்பது நாற்பது லட்சம் என்று கேட்கிறார்கள். இருக்கும் நீங்கள் கொடுக்கிறீர்கள் இல்லாத ஏழைகள் என்ன செய்வது. என்னியவர்களே நான் எழுதியவற்றிலி தவறு இருந்தால் மன்னியுங்கள். இங்கிருக்கும் எல்லாத் தமிழனும் இப்படி இல்லை. ஆனால் ஆநேகம் பேர் இப்படித்தான். இதனால் நெஞ்சு பொறுக்காமல் எழுதிவிட்டேன். பிரபாகரன் என்ற உன்னதமானவரின் காலத்தில் பிறந்து அவரின் ஆட்சியின் கீழ் வாழ்ந்து இறுக்கமான கட்டுப்பாட்டை மனதில் விதைத்த என் போன்றவர்களால் இத்தகைய கலாசார சீரழிகளை தாங்க முடியவில்லை. இத்தகைய கலாசார சீரழிகளுக்கு உங்கள் பணம் காரணமாக அமைந்துவிடக்கூடாதில்லையா..? தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment