Tuesday 15 December 2009

தமிழகத்தில் தமிழ் உணர்வுள்ள பலம்பொருந்திய அரசியல் கூட்டணி உருவாக்கப்படவேண்டும்

தமிழக அரசியல் தலைமைகள் இன்று ஈழத்தமிழர்கள் தொடர்பில் தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டிய தருணத்தில் உள்ளனர் என்பதை எடுத்துக்கூறவேண்டிய நிலைமைக்கு நாங்கள் இன்று தள்ளப்பட்டுள்ளோம். அண்மைக்காலமாக இந்தியாவின் பல பகுதிகளிலும் அதிலும் அதிகமாக தமிழகத்தில் இலங்கையில் தமிழர்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ளது தொடர்பில் தொடர் விழிப்புணர்வு போராட்டம் நடத்தப்பட்டுவருகின்றமை தினமும் செய்திகளாக வெளிவந்தவண்ணம் உள்ளன. உண்மையில் இச்செயற்பாடுகளை ஒவ்வொரு தமிழனும் உணர்வுபூர்வமாக கொள்வதுடன் தமது ஆதரவையும் தெரிவிக்கவேண்டும். இன்று உலகின் மனசாட்சியை தொட்டுக்கொண்டிருப்பது இலங்கையில் சுமார் 3 இலட்சம் தமிழர்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கும் செயற்பாடாகும். இது தொடர்பில் இந்தியாவில் ஊடகங்கள் பாராமுகமாக இருக்கின்றபோதிலும் ஒரு சில தமிழ் ஊடகங்கள் அவற்றை வெளிக்கொணர்வதில் முக்கிய பங்காற்றுகின்றன. அதிலும் தமிழகத்தில் உள்ள தமிழ் உணர்வுள்ள அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் போராட்டங்கள் எம்மை ஓரளவு ஆதரவடைய வைத்தாலும் இது தொடர்பில் இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் வெளியிட்டுவரும் அறிக்கைகள் இலங்கை அரசாங்கமே ஆச்சரியப்படவைக்கும் அளவுக்கு உள்ளன. உதாரணமாகஇலங்கை சென்று திரும்பிய பாராளுமன்ற குழுவின் தலைவர் டீ.ஆர்.பாலு நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை அரசாங்கம் 68ஆயிரம் தமிழர்களை குடியேற்றிவிட்டதாக பெரும் பொய்யை தமிழக மக்கள் மத்தியில் அவிழ்த்துவிட்டுள்ளார். ஒன்றை இந்த டீ.ஆர்.பாலு போன்ற தமிழக அரசியல்வாதிகள் புரிந்துகொள்ளவேண்டும். நீங்கள் நினைத்ததைப்போன்று இங்கு எந்தவித குடியேற்றங்களும் செய்யப்படவில்லை. முகாமில் இருந்து சிறு தொகையினர் கொண்டுசெல்லப்பட்டு வேறு ஒரு இடத்தில் அகதிமுகாமிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதுவரை எவரும் தமது சொந்த இடத்தில் குடியமர்த்தப்படவில்லை. அவ்வாறு குடியமர்த்தப்பட்டிருந்தால் அது தொடர்பில் இந்த தமிழக அரசியல்வாதிகளினால் நிரூபிக்ககூடிய ஆதாரங்களை வழங்கமுடியுமா? இலங்கையில் தமிழர்களுக்கு நீங்கள் உதவாவிட்டாலும் பரவாயில்லை. பொய்யான தகவல்களை தமிழக மக்கள் மத்தியில் பரப்பமுயலவேண்டாம் என்பதே எங்கள் கோரிக்கை. இந்த வேளையில் தமிழகத்தில் போராட்டங்களை முன்னெடுத்துவரும் தமிழ் உணர்வுள்ள அரசியல் தலைமைகள் முகாம் மக்களின் இடர்பாடுகள் மட்டுமன்றி இவ்வாறான பொய் தகவல்களை வழங்கிவரும் அரசியல்வாதிகள் தொடர்பிலும் விழிப்புணர்வுகளை மேற்கொள்ளவேண்டும். அதற்காக இந்த வேளையில் தமிழ் உணர்வுள்ள அரசியல் தலைமைகள் தம்மிடம் உள்ள அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றுசேரவேண்டிய வரலாற்று கடமை உங்களுக்கு உள்ளது. இன்று சர்வதேசம் எங்கும் இலங்கை தமிழர்களுக்கு சாதகமான நிலை உருவாகி வருகின்றது.இதனை இல்லாமல் செய்ய இலங்கை சிங்கள அரசு தமிழகத்தில் உள்ள ஆளும் வர்க்கத்தினரை நன்கு பயன்படுத்திவருகின்றது. எனவே தமிழகத்தில் தமிழர்களுக்கு ஆதரவான பலமான கூட்டணி ஒன்றை உருவாக்க அரசியல் தலைமைகள் அரசியலுக்கு அப்பால் ஒன்றுசெரவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இதற்கு தமிழ் உணர்வாளர் நெடுமாறன் போன்ற தமிழ் இனத்தின் காவலர்கள் கடும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.அதன் மூலம் பலமான தமிழ் கூட்டணியை உருவாக்கி இன்று சர்வதேசம் எங்கும் தமிழர்கள் பால் எழுந்துவரும் சிறப்பான கருத்தியலை செயலுருவாக்கம்பெற வழிசமைக்கவேண்டும் என்பதே இன்று ஒவ்வொரு தமிழனதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment