Tuesday 29 December 2009

டைட்டானிக் சாதனையை பின்னுக்குத் தள்ளும் அவதார் திரைப்படம் !!!

அவதார் ஹாலிவுட்டில் மட்டும் அல்லாது உலகத்தின் அனைத்து ஒட்டுமொத்த திரை உலகத்தையும் மீண்டும் தான் பக்கம் திருப்பி இருக்கிறது ., என்பது அனைவரும் அறிந்த உண்மை . கடந்த 18ம் தேதி வெளியாகி உலகத்தின் அனைத்து திரை அரங்குகளிலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் பிரமிப்பில் ஆழ்த்திக்கொண்டு இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான் என்றாலும் . இந்த அவதார் முப்பரிமான திரைப்படம் வசூழிலும் இதுவரை உலகத்தின் எந்த திரைப்படங்களும் செய்யாத ஒரு புதிய சாதனையை நிகழ்த்தி மீண்டும் ரசிகர்களுக்கு ஒரு புதிய பிரமிப்பை கொடுத்துக்கொண்டு இருப்பதாக ஹாலிவுட் வட்டார செய்திகள் கூறுகின்றன . எத்தனையோ ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்னும் உலக மக்கள் அனைவரின் இதயங்களில் ஒரு அழியா இடம் பிடித்த ஒரே படம் டைட்டானிக் என்பது நாம் அனைவரும் அறிந்ததே . அந்த படத்தை உருவாக்கி உலகத்தின் அத்தனை உயரிய விருதுகளையும் , வரலாற்று சுவடுகளில் இன்னும் வசூழில் முதல் இடத்தை பிடித்துக்கொண்டு இருக்கும் ஒரே திரைப்படம் டைட்டானிக் என்ற பெருமைக்கு சொந்தக்காரருமான ஜேம்ஸ் கேமரூன் என்பது தான் இந்த அவதார் படத்தின் பரபரப்புகளுக்கு முக்கியக் காரணம். இருக்காதா ? டைட்டானிக் என்ற கப்பலை கவிழ்த்தே திரைப்படத்தை உலகெங்கும் ஓடவிட்டவராச்சே. இவருடைய புதிய டெக்னாலஜியைப் பற்றிக் கேள்விப்பட்டு வியந்து, நேரில் போய் அசந்த இயக்குனர்களின் பட்டியலில் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கும் ஒருவர். ஜூராசிக் பார்க்கில் டைனோசர்களை அலற விட்டவரையே அலற வைத்து விட்டதாம் ஜேம்ஸின் டெக்னிக்ஸ். மற்ற படங்களில் உள்ளது போல தனியே நடிகர்களை நடிக்க வைத்து பின்னர் கிராபிக்ஸ் காட்சியில் இணைக்காமல், கிராபிக்ஸ் காட்சியை கம்ப்யூட்டரில் இணையாக ஓடவிட்டு அதற்குத் தக்கபடி நடிகர்களை நடிக்க வைத்திருக்கிறார். இந்த விர்ச்சுவல் கேமரா டெக்னிக் ஒரு முப்பரிமாண மாய உலகை கன கட்சிதமாய் படம் பிடித்திருக்கிறதாம். நடிகர்களின் முக அசைவுகளை “த வால்யம்” எனும் கருவி மூலம் துல்லியமாகப் படம் பிடித்து, அதை கம்யூட்டர் இமேஜ்களுக்கு இறக்குமதி செய்திருக்கிறார். இதன் மூலம் டிஜிடல் உருவங்கள் அச்சு அசலாக மனித அசைவுகளைப் பிரதிபலிக்கும் ! அப்படி எடுக்கப்பட்ட அவதார் படத்தில் எது நிஜம் எது கிராபிக்ஸ் என தெரியாமல் ரசிகர்கள் குழம்பப் போவது சர்வ நிச்சயம். உண்மையில் வெறும் 35 சதவீதம் காட்சிகள் தான் இதில் உண்மையானவை. மிச்சம் 65 சதவீதமும் கம்ப்யூட்டர் காட்டும் மாயாஜாலம் தான் என்கிறார் ஜேம்ஸ். டைட்டானிக் படத்துக்கு இசையமைத்த ஜேம்ஸ் ஹார்னரையே செண்டிமெண்டாக இந்தப் படத்துக்கும் இசையமைக்க வைத்திருக்கிறார். ஒரு புதிய உலகம். ஒரு புதிய இசை. மிக மிகப் புதுமையாக வந்திருக்கிறது என பூரிக்கிறது யூனிட். பிரமிப்பூட்டும் ஒரு கிராபிக்ஸ் கலக்கலில் இதமான காதல் இழையோடினால் அது நிச்சயம் வெற்றி பெறும். அந்த பார்முலா தான் டைட்டானிக்கிற்கு மிரட்டல் வெற்றியைக் கொடுத்தது. அதே பார்முலா தான் அவதாரையும் சூப்பர் டுப்பர் ஹிட்டாக்கும் என்கிறார் ஜேம்ஸ் ஹார்னர். டைட்டானிக் திரைப்படம் உலகெங்கும் சுமார் 1.8 பில்லியன் டாலர்கள் சம்பாதித்துக் கொடுத்தது. இந்தப் படம் அதை விட அதிக அளவில் சம்பாதிக்கும் என்கின்றனர் தயாரிப்பாளர்கள். காரணம் இந்தப் படத்தின் 3D டெக்னாலஜி ரசிகர்களைத் தியேட்டருக்கு கட்டாயப்படுத்தி வரவைக்குமாம். இந்தப் படத்தில் ஹீரோவான தன் மூலம் ஜென்ம சாபல்யமே பெற்றுவிட்டது போல் புல்லரிக்கிறார் 33 வயதான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சேம் வொர்த்திங்டன். அவதார் திரைப்படத்தின் பெயரிலும் அவதாரின் நீல நிறத்திலும் இந்தியப் பாதிப்பு தெளிவாகவே தெரிகிறது. அவதாரின் வர்ணம் சிவபெருமானின் நீல நிறத்திலிருந்து ஜேம்ஸ் எடுத்துக் கொண்டது என்கின்றனர் விமர்சகர்கள். இந்த படத்தை பற்றி அவர் கூறுகையில் . நான் அவதார் படத்தை பற்றி அதிகமாக சொல்லப்போவது இல்லை . சின்ன வயதிலிருந்தே நான் படிக்கும் எல்லா அறிவியல் புனைக் கதைகளும் என்னை ஏதோ ஒரு வகையில் பாதிக்கும். அப்படிப் படித்த எல்லா கதைகளையும் கலந்து கட்டி நான் உருவாக்கிய ஸ்பெஷல் கதை தான் அவதார், என்கிறார் ஜேம்ஸ் கேமரூன். இந்தக் கதையை அவர் எழுதியது 1994ல். டைட்டானிக்கை சுடச் சுடக் கவிழ்த்த கையோடு 1997லேயே அவதாரை கையில் எடுத்தார். 100 மில்லியன் பட்ஜெட்டில் படத்தைத் தயாராக்க வேண்டும் என்பது அவருடைய திட்டம். முழுக்க முழுக்க கம்ப்யூட்டரில் நடிகர்களை வடிவமைத்து சினிமா எடுக்க வேண்டும், டெக்னாலஜியைக் கொண்டு மிரட்ட வேண்டும் என பல திட்டங்கள் வைத்திருந்தார். ஆனால் என்ன அவர் நினைப்பதைச் செய்ய அப்போது டெக்னாலஜி ஒத்துழைக்கவில்லையாம். அவதார் என்னுடைய கனவுப் படம் என்கிறார் சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கும் 55 வயதான ஜேம்ஸ் கேமரூன். இந்தப் படம் ஹிட்டானால் நிச்சயம் இதன் இதன் இரண்டாம் மூன்றாம் பாகங்களை எடுப்பேன் என புன்னகைக்கிறார். ஏற்கனவே டெர்மினேட்டர் படத்தை எடுத்து அதை ஹிட்டாக்கி, இரண்டாம் பாகம் எடுத்து சூப்பர் ஹிட்டாக்கிய அனுபவம் அவருக்கு உண்டு . இந்த உலகத்தை மீண்டும் பிரமிப்பில் ஆழ்த்துவதற்காக பனிரெண்டு ஆண்டுகள் காத்திருந்து நான் உருவாக்கி உள்ள படம்தான் அவதார் . என்று அவர் இப்படத்தைப் பற்றி கூறிய ஒரு சில வார்த்தைகலே இந்த படத்தை உடனே பார்க்கவேண்டும் என்ற ஆவலை அதிகமாக தூண்டி உள்ளது . டெக்னாலஜியில் ஹாலிவுட்டையே இன்னொரு தளத்துக்கு இந்தப் படம் எடுத்துச் செல்லும் என்கிறார்கள். 20யத் சென்சுரி ஃபாக்ஸ் வெளியிடப் போகும் இந்தப் படத்தைத் தயாரித்திருப்பது லைட்ஸ் ஸ்ட்ரோம் எண்டர்டெயின்மெண்ட். செலவைப் பற்றிக் கவலைப்படாமல் சுமார் 600 மில்லியன் டாலர்களை இந்தப் படத்தில் வாரி இறைத்திருக்கிறார்கள். டைட்டானிக், ஏலியன்ஸ், டெர்மினேட்டர் 2 போன்ற மிரட்டலான படங்களைத் தயாரித்ததும் இவர்கள் தான்என்பது குறிப்பிடத்தக்கது . சினிமாவை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதிலேயே இந்தப் படம் புரட்சி செய்யும். வீட்டில் இருப்பவர்களை 3D தியேட்டர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் இழுத்து வரும். இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் ஒரு புதிய உலகத்துக்குள் போகாமல் வெளியே வந்த அனுபவம் இருக்கவே இருக்காது என அடித்துச் சொல்கிறார் ஜேம்ஸ். அவதார் படத்தைப் பார்த்த வெகு சிலரும் இன்னும் வியப்பிலிருந்து வெளியே வரவில்லையாம். உலகத்தின் ஒட்டு மொத்த ரசிகர்களின் தூக்கத்தையும் கலவாடிச் சென்ற இந்தப் படத்தின் கதை தான் என்ன ? 22ம் நூற்றாண்டின் துவக்கத்தில் பூமியிலுள்ள எரிபொருள் உட்பட கணிய வளங்கள் யாவும் தீர்ந்து விடுவதன் காரணமாக விண்வெளியில் இருக்கும் பண்டோரா எனும் கிரகத்தை முற்றுகையிட வேண்டிய தேவைக்கு மனிதர்கள் தள்ளப்படுகிறார்கள். கதையின் நாயகன் ஜேக் ஒரு கடற்படை வீரர். போரில் காயமடைந்து இடுப்புக்குக் கீழே உடல் செயல் இழந்த நிலையில் இருக்கிறார். அவர் மீண்டும் எழும்பி நடந்து பண்டோராவுக்குப் போகும் வாய்ப்பு வருகிறது. பண்டோரா ஒரு தனி கிரகம். அசத்தலான அந்தக் கிரகத்தில் பிரமிப்பையும், பயத்தையும் ஊட்டும் பல விதமான ஜீவராசிகள் வாழ்கின்றன. அங்கே நவி எனும் மனிதர்களும் வசிக்கிறார்கள். 10 அடி உயரம், நீளமான வால், நீல நிற தோல், பெரிய காது, சப்பை மூக்கு என வியக்க வைக்கும் உருவம் அவர்களுக்கு. இவர்கள் முழு வளர்ச்சியடையாதவர்கள் என மனிதர்கள் நினைக்கிறான். உண்மையில் நவிகள் மனிதர்களை விட அதி பயங்கர சக்திகளுடன் இருக்கிறார்கள். அந்த கிரகத்தில் உள்ள மாபெரும் சிக்கல், அங்கே மனிதனால் சுவாசிக்க முடியாது என்பது. அந்தக் கிரகத்துக்குப் போக வேண்டுமென்றால் நவிகளைப் போல ஆய்வுக் கூடத்தில் மனிதர்களை உருவாக்க வேண்டும். அப்படி மனிதர்களின் டி.என்.ஏயைக் கொண்டு உருவாக்கப்படும் நவி போன்ற நீல மனிதர்கள் தான் அவதார் என்பவர்கள். ஊனமுற்ற ஜேக் தனது அவதார் உருவத்தின் மூலமாக பண்டோராவுக்குள் நுழைகிறார். கிரகத்தின் அழகில் மெய் மறக்கிறார். கூடவே அங்குள்ள ஒரு நவி பெண்ணுடன் காதலிலும் சிக்கிக் கொள்கிறார். பண்டோராவில் மனிதர்களின் தலையிடலை நவிகள் விரும்பவில்லை. இப்போது ஜேக் தன் இனமான மனிதர்களுக்கும், தன் காதலியின் இனமான நவிகளுக்கும் இடையே சிக்கிக் கொள்கிறார். அவர் எந்தப் பக்கம் சாய்கிறார், அதன் விளைவுகள் என்னென்ன என்பதுதான் கதை . இந்தப் படம் இந்தியாவில் மட்டும் 1600 பிரிண்டுகளுடன், தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகிறது. ரூ.1350 கோடி செலவில் தயாராகியுள்ள இந்த அவதார், இதுவரை உலகில் வெளியான அனைத்து கிராபிக்ஸ் படங்களையும் மறக்க செய்துவிடும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று 'டைம்' பத்திரிகை பாராட்டியுள்ளது. இந்தப் படத்துக்காக தனி கிரகம் ஒன்றையே உருவாக்கினார்களாம் கேமரூன் மற்றும் குழுவினர். அதில் வித்தியாசமான விலங்குகள், மரங்கள் போன்ற தோற்றங்களை உருவாக்கி அவற்றைத்தான் முப்பரிமாணத்தில் அவதாரமடுக்க வைத்துள்ளனர். மெர்குரிப் பூக்கள் போல் ஒளிரும் தாவரங்கள், பூக்கள், மரங்கள், நடைபாதைகள் இரவு நேரங்களில் ஒளிர்வதும், மாறுபட்ட உயிரின வகைகள் எந்திரத் தனமாக இல்லாமல் எதார்த்தமாக அனைத்தும் நிகழ்வதுபோலவே வடிவமைத்து இருக்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் .பெரும்பகுதி லாஸ்ஏஞ்சல்ஸ் மற்றும் நியூசிலாந்து நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. FUSION DIGITAL 3D CAMERA என்ற புதிய கேமராவை உருவாக்கி அந்த விசேஷ கேமராவால்தான் ''அவதார்'' படத்தை ஒளிப்பதிவு செய்துள்ளனர் .உயிரற்ற பொருட்களையும், அசைவுகளுடன் உயிரோட்டமாகக் காட்டும் புதிய தொழில்நுட்பத்தின் துணையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டெக்னிஷியன்கள் கூறுகையில் இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் பிரமிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக படத்தின் மொத்தக் குழுக்களும் இரண்டு மாதங்கள் அடர்ந்த கட்டுப்பகுதியில் முகாம் அமைத்து தங்கி , அங்கு தினம்தோரும் நடைபெறும் இயற்கை மாற்றம் , அதனால் ஏற்படும் பதிப்புகள் என்று ஒவ்வொன்றையும் உணர்வுப்பூர்வமாக ஆராய்ந்த பிறகே இந்த படத்தை முப்பரிமான முறையில் அமைக்கத் தொடங்கியதாக கூறுகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களே . தமிழில் நேரடியாக வெளியாகும் முதல் ஹாலிவுட் முப்பரிமாண படம் என்ற பெருமையைப் பெறுகிறது அவதார். என்பது குறிப்பிடத்தக்கது . அமெரிக்காவில் 17-ம் தேதி நள்ளிரவு நடந்த பிரிமியர் காட்சி மூலம் மட்டுமே 6.5மில்லியன் டாலர் வசூலித்தது அவதார். அடுத்த நாள் 18-ம் தேதி மட்டும் வட அமெரிக்கா-கனடாவில் 42 மில்லியன் டாலர்களை வசூலித்து சாதனைப் படைத்தது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையும் சேர்த்து மொத்தம் 96 மில்லியன் டாலர்கள் அமெரிக்காவில் மட்டுமே வசூலாகிவிட்டது. என்றும் ஹாலிவுட் இணையதளம் தெரிவித்துள்ளது. உலகின் பிற பகுதிகளில் கிடைத்த வசூலையும் சேர்த்து, முதல்வார இறுதியில், மூன்றே நாளில் அவதார் 463 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது முதல் மாத முடிவில் இந்தத் தொகை 2058 மில்லியன் டாலர்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப் பாடுவதாக ஹாலிவுட் இணையதளம் தெரிவித்துள்ளது . இன்னும் ரிலீசாக நாடுகளில் கிடைக்கும் வருமானம் இதில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வெளியான முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் அவதார் வசூலித்திருப்பது 463 மில்லியன் டாலர்கள். இதுவரை எந்த ஹாலிவுட் படமும் செய்திராத வரலாற்று சாதனை . அவதார் படம் வசூழில் இனி வரும் நாட்களில் டைட்டானிக் படத்தின் வசூல் சாதனையை பின்னுக்குத் தள்ளும் என்று ஹாலிவுட் வட்டாரங்கள் தெருவிக்கின்றன